by Bella Dalima 13-12-2019 | 4:57 PM
Colombo (News 1st) பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று (12) பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர், வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.
இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே கைவசம் இருந்த பல்வேறு தொகுதிகளை இழந்த தொழிலாளர் கட்சி, 202 இடங்களைப் பிடித்திருந்தது.
தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.
அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியான பின்னர், போரிஸ் ஜோன்சன், பக்கிங்காம் அரண்மனையில் ராணியை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோரவுள்ளார்.
தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த ஜெரமி கார்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.