by Staff Writer 05-12-2019 | 9:10 PM
Colombo (News 1st) தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர்கள் இன்று 9 தங்கப்பதக்கங்களை சுவீகரித்தனர்.
ஆடவருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான இன்றைய மூன்றாம் நாளில் மகளிருக்கான 100 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் இலங்கைக்கு முதல் தங்கப்பதக்கத்தை லக்ஷிகா சுகந்தி வென்று கொடுத்தார்.
100 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தை அவர் 13.68 செக்கன்ட்களில் கடந்தார்.
ஆடவருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் சப்ரின் அஹமட் வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டார். போட்டியில் அவர் 15.95 மீட்டர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் நட்சத்திரமான அருண தர்ஷன தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டதுடன், போட்டியை அவர் 46.69 செக்கன்ட்களில் கடந்தார்.
இந்த போட்டியில் வெண்கலப் பதக்கமும் இலங்கைக்கு கிட்டியதுடன், லக்மால் பிரியந்த அந்த பதக்கத்தை தனதாக்கினார்.
இதனிடையே, மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிட்டியதுடன், டில்ஷி குமாரசிங்க இலங்கைக்கு அந்த தங்கப்பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியை அவர் 53.4 செக்கன்ட்களில் கடந்தார்.
மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் ஹசினி பிரபோதி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இந்தப் போட்டியில் இலங்கையின் மற்றொரு வீராங்கனையான விதுஷா லக்ஷானி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
தெற்காசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகள் இன்று ஆரம்பமானதுடன், ஆடவருக்கான 200 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் Butterfly நீச்சல் போட்டிகளில் இலங்கையின் மத்தியூ அபேசிங்க இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கினார்.
இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான பளு தூக்கல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் இசுரு குமார தங்கப்பதக்கம் வென்றார்.