13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்

by Staff Writer 04-12-2019 | 8:54 PM
Colombo (News 1st) நேபாளத்தில் நடைபெறும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் குமார் சண்முகேஷ்வரன் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார். தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான இன்றைய இரண்டாம் நாளில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் குமார் சண்முகேஷ்வரன் வென்று கொடுத்தார். அவர் போட்டியை 20 நிமிடங்கள் 49.20 செக்கன்ட்களில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். இதேவேளை, மகளிருக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் சாரங்கி சில்வா தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 6.38 செக்கன்ட்களுக்கு திறமையை வெளிப்படுத்தினார். போட்டியில் வெண்கலப்பதக்கமும் இலங்கைக்கு கிட்டியதுடன். அஞ்சானி சுலவன்ச அந்த பதக்கத்தை வெற்றி கொண்டார். ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் வினோஜ் சுரஞ்சய வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். 200 மீட்டரை அவர் 21.19 செக்கன்ட்களில் கடந்தார். மகளிருக்கான பரிதி வட்டம் எறிதலில் இலங்கை சார்பாக பங்கேற்ற இஷாரா மதுரங்கி, போட்டியில் 41.29 மீட்டர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தினார். இலங்கையின் சாலிந்த சம்பத் தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான டய்குவாண்டோ போட்டியின் பென்டம் பிரிவில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார். இதேவேளை, டென்னிஸ் போட்டிகளுக்கான மகளிர் அணிப்பிரிவு போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. ஆடவருக்கான கராத்தே குமித்தே பிரிவில் போட்டியிட்ட டீ.கே லக்மால் வெண்கலப்பதக்கத்தை வென்றதுடன், குமித்தே ஆடவருக்கான அணிப்பிரிவில் இலங்கை அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதனிடையே நேபாளத்திற்கு எதிரான கைப்பந்தாட்டப் போட்டிகளின் முதல் சுற்றில் இலங்கை வெற்றியீட்டியது.