சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல்: CID விசாரணை

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

by Staff Writer 30-11-2019 | 4:20 PM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகளுக்குத் தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து தூதுவராலயத்திடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதுவராலயம் நேற்று (29) பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் குழு மற்றும் பொலிஸ் கெமரா கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது. கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தாம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என கூறியே தூதரக அதிகாரியை அச்சுறுத்தியுள்ளனர். எனினும், விசாரணைகளைத் தவறாக வழிநடத்தும் பொருட்டு சந்தேகநபர்கள் பொய்யுரைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து குற்றமிழைத்தவர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரை அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.