முன்னாள் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி

by Staff Writer 22-11-2019 | 7:55 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது. முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் கம்பளையிலுள்ள அன்னாரின் வீட்டில் இருந்து வீகுலவத்த மைதானத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஆகாய மார்க்கமாக பாராளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ உள்ளிட்டோர் முன்னாள் பிரதமரின் பூதவுடலை பாராளுமன்றத்தின் கலந்துரையாடல் மண்டபத்திற்கு எடுத்துச்சென்றனர். பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு இன்று பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இறுதி அஞ்சலி செலுத்தினார். பாராளுமன்ற கட்டட வளாகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், டி.எம்.ஜயரத்னவின் பூதவுடல் ஆகாய மார்க்கமாக கம்பளையிலுள்ள அன்னாரின் வீட்டிற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 88 ஆவது வயதில் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார் கம்பளை - தொழுவ - ஹலியத்த மைதானத்தில் அரச மரியாதையுடன் நாளை மாலை இறதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன கூறினார்.