by Staff Writer 21-11-2019 | 5:34 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மீண்டும் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதாக சோளப் பயிர்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - மாணிக்கபுரம், வள்ளுவர் புரம் பகுதியில் சோளப்பயிர்களில் படைப்புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
படைப்புழுவின் தாக்கத்தினால் பயிர்கள் செழிப்பற்ற நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூபாலப்பிள்ளை உகநாதனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
தமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது படைப்புழு தாக்கம் தடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறை - அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்களில் படைப்புழு தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை - கிண்ணியா, வட்டமடு, ஆயிலியடியிலும் படைப்புழு தாக்கத்தால் சோளப் பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் இலாபமில்லாத ஒரு செய்கையாக சோளச்செய்கை அமைந்துவிடும் என விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.