by Bella Dalima 25-10-2019 | 5:43 PM
சிறுநீரகங்கள் செயலிழந்ததால் பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயதான பரவை முனியம்மா தனது நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமடைந்து, 2003 ஆம் ஆண்டு வௌியான தூள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து பரவை முனியம்மா 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இறுதியாக 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவாய்ப்புகள் குறைந்தன.
இதையடுத்து, பரவை முனியம்மா தனது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 இலட்சம் வைப்பு நிதி வழங்கினார்.
அதன் மூலம் மாதந்தோறும் 6000 ரூபா அவருக்கு கிடைத்து வருகிறது. எனினும், அந்த தொகை மருத்துவ செலவுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளதாகவும் நுரையீரலில் நீர் கட்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நோயால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் பரவை முனியம்மா காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அரசும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.