பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

by Staff Writer 23-10-2019 | 9:09 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சேவை நிமித்தம் மற்றும் அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ்மா அதிபரினால் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன் அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறான அனுமதியுடன் இதுவரை 10 இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனைத் தவிர ஏனைய இடமாற்றங்கள், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை வழங்கப்பட மாட்டாது என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.