by Staff Writer 13-10-2019 | 3:26 PM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபர்கள் சமூக வலைத்தளங்களூடாக, நண்பர்களாக இணைந்துகொண்டு, நம்பிக்கையை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு நாடுகளில் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அல்லது பரிசுகள் வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்து, அவை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் பொய்யுரைப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெற்றிகொண்ட பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்து, சந்தேகநபர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கு மக்களிடமிருந்து பணத்தை வைப்பிலிட்டுக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு பணம் அல்லது பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பணத்தை வைப்பிலிடுவதாயின், பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறு பொலிஸார், மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.