எவரெஸ்ட்டில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை

எவரெஸ்ட் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை

by Chandrasekaram Chandravadani 22-08-2019 | 3:30 PM
Colombo (News 1st) ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை எவரெஸ்ட் பகுதியில் தடை செய்வதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடை உத்தரவானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது தமது பிராந்தியத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு, எவரெஸ்ட் உட்பட ஏனைய மலைப்பகுதிகள் நீண்ட காலத்திற்கு சுத்தமானதாகக் காணப்படும் என உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். அண்மையில் எவரெஸ்ட் மலைப்பகுதியிலிருந்து 11 தொன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் பிளாஸ்டிக் பொருட்கள் மலைப்பகுதியில் போடப்படுவது இதனால் தடை செய்யப்படவுள்ளது. 30 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை மலை ஏறுபவர்கள் இனி எடுத்துச்செல்ல முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.