தேசிய பாதுகாப்பு குறித்து இழிவான விடயங்களை பேச வேண்டாம்: ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 16-08-2019 | 6:56 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொருத்தமற்ற, இழிவான விடயங்களை பேச வேண்டாம் என தாம் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இராணுவத்தினரை வழிநடத்திய தலைவர்கள் இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்கள் வேதனையளிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு ரண பரஷூவ மற்றும் ரெஜிமண்ட் பரஷூவ விருதுகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தாய் நாட்டிற்கும் தேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வௌியிடக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றிற்காக முப்படையினர் தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டின் அனைத்து பிரஜைகளும் கடன் பட்டவர்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.