வௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை

சவுதி பெண்கள் வௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை

by Bella Dalima 02-08-2019 | 4:50 PM
சவுதி அரேபிய பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணக் கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு இரத்து செய்துள்ளது. சவுதி அரேபியாவில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டம் இருந்து வந்தது. உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தை அரேபிய அரசு இரத்து செய்துள்ளது. அதில், 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் இனி ஆண்களின் ஒப்புதல் இல்லாமலேயே வெளிநாடு செல்ல முடியும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இவர் பொறுப்பேற்ற நாள் முதல் அரசின் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல புதிய திட்டங்களையும், நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 40 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி, கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என பல அமைப்புக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதன் வெளிப்பாடாக பெண்களின் நிலைமையை உணர்ந்து இந்த நடவடிக்கையை மன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.