தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழப்பு: சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 

by Staff Writer 24-07-2019 | 4:08 PM
Colombo (News 1st) தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த தவணையின்போது சந்தேகநபர்களை ஆஜர்படுத்தத் தவறினால், வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். வந்தாறுமூலை - பலாச்சோலை கிராமத்தை சேர்ந்த 9 வயதான விஜயகாந்த் விதுலக்ஷன் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். தவறான குருதி வழங்கப்பட்டமையால் இந்த சிறுவனின் மரணம் சம்பவித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு தாதியர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவிற்கு அமைய வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதற்கமைய, சந்தேகநபர்களிடம் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் A.C.ரிஸ்வான் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.