by Staff Writer 19-07-2019 | 5:47 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, மிருகப் பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வட மாகாணங்களில் மிருகப் பலியிட்டு வேள்வி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
மிருகப்பலியிட்டு வேள்வி நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ். மேல்நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மிருகப் பலியிடுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.
இந்த தடை உத்தரவிற்கு எதிராக கவுணாவத்தை ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு விண்ணப்பத்தினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேன்முறையீட்டு விண்ணப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதியில் வட மாகாணத்தில் மிருகப் பலியிட்டு வேள்வி நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கின் எதிர் மனுதாரர் கவுணாவத்தை நரசிம்ம ஆலயத்திற்கு 50,000 ரூபா வழக்குச் செலவையும் செலுத்த வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.