சிறுபோக செய்கைக்கு நீர் விநியோகிப்பதில் சவால்

வறட்சியால் 14,000 குளங்கள் வற்றின; சிறுபோக செய்கைக்கு நீர் விநியோகிப்பதில் சவால்

by Staff Writer 05-07-2019 | 5:29 PM
Colombo (News 1st) வறட்சியுடனான வானிலை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 14,000 குளங்கள் வற்றியுள்ளன. வறட்சி காரணமாக இம்முறை சிறுபோகத்தில் நெற்செய்கை 10 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி பிரபாத் விதாரண தெரிவித்தார். விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 470,776 ஏக்கர் விவசாய நிலம் காணப்படுகின்றது. நிலவும் வறட்சி காரணமாக இம்முறை சிறுபோக செய்கைக்கு நீர் விநியோகிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாக பிரபாத் விதாரண கூறியுள்ளார். இதனிடையே, வறட்சி காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் 26 வீதமான நீரே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் வேகமாகக் குறைவடைந்து வருவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452,000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.