அமெரிக்க - வட கொரிய தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க - வட கொரிய தலைவர்கள் சந்திப்பு

by Fazlullah Mubarak 30-06-2019 | 8:35 PM

வட கொரியாவுக்குள் கால்பதித்த பதவியிலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு, இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள கொரிய எல்லைப் பகுதியில் இன்று இடம்பெற்றது. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் அழைப்பிற்கிணங்க, வட கொரிய எல்லைக்குள் ஜனாதிபதி ட்ரம்ப் பிரவேசித்தார். தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து வட கொரிய ஜனாதிபதி, தென் கொரிய எல்லைக்குள் பிரவேசித்தார். அங்கு கிம் ஜோங் உன்னை வரவேற்பதற்காக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வருகை தந்திருந்தார். இதன்பின்னர் அமெரிக்க மற்றும் வட கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது கைவிடப்பட்ட அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. தமது தென் கொரிய விஜயத்தின்போது வட கொரிய ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி நேற்றைய தினம் தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி அவரைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் அணுவாயுதக் களைவு தொடர்பில் இரு தலைவர்களிடையே இடம்பெற்ற சந்திப்பு ஒப்பந்தங்களின்றி முடிவடைந்தது. ஒரு வருட காலப்பகுதியில் இரு தலைவர்களிடையே இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.