Batticaloa Campus: வங்கி முகாமையாளருக்கு அறிவிப்பு

'Batticaloa Campus' தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு வங்கி முகாமையாளருக்கு அறிவிப்பு

by Staff Writer 23-06-2019 | 1:47 PM
Colombo (News 1st) 'Batticaloa Campus' நிறுவனம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குமாறு இலங்கை வங்கியின் முகாமையாளருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Batticaloa Campus நிறுவனத்தின் பெயரில் இலங்கை வங்கியிலுள்ள வங்கிக்கணக்கு தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே, முகாமையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கை வங்கி முகாமையாளர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். வங்கிக் கணக்கு தொடர்பில் இலங்கை வங்கியின் விநியோகப்பிரிவின் முகாமையாளர் ஏற்கனவே ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இலங்கை வங்கியிலுள்ள வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டிலிருந்து கடனாக நிதி கிடைக்கவில்லை என அவர் இதன்போது குறிப்பட்டிருந்தார். எனினும், இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா, குறித்த வங்கி கணக்கிற்கு வௌிநாட்டு கடன் கிடைக்கப்பெற்றிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.