துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் படலம்

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கரையோரத்தில் எண்ணெய் படலம்

by Staff Writer 06-06-2019 | 9:20 AM
Colombo (News 1st) கொழும்புத் துறைமுக நகரை அண்மித்த கரையோரத்தில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸை மற்றும் வௌ்ளவத்தை கரையோரங்களில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய்ப் படலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனயைடுத்து, கல்கிஸ்ஸை மற்றும் வௌ்ளவத்தை கரையோரங்களில் காணப்படும் எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாநிதி டேர்னி பிரதீப் குமார மேலும் தெரிவித்துள்ளார். தற்போது சிறியளவில் மாத்திரமே எண்ணெய்ப் படலம் காணப்படுவதாகவும் அதனால் சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பலொன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே கரையோரத்தில் இவ்வாறு எண்ணெய்ப் படலம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட கப்பல் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.