by Bella Dalima 05-06-2019 | 5:00 PM
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட எபோலா நோய் பரவலில், இதுவரை 2,008 பேருக்கு அந்நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவர்களில் 1,914 பேருக்கு எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014- 2016 ஆம் ஆண்டில் எபோலா உயிர்க்கொல்லி நோயால் 11,300 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு தற்போதுதான் அந்நோயின் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது என்றும், இது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.