அமித் ஜீவன் வீரசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

அமித் ஜீவன் வீரசிங்கவிற்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 29-05-2019 | 3:36 PM
Colombo (News 1st) மஹசோன் அமைப்பின் தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணை மனு தொடர்பான உத்தரவும் எதிர்வரும் 04 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் நேற்று (28) மன்றுக்கு அறிவித்தனர். சந்தேகநபரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 14 ஆம் திகதி ஹெட்டிப்பொல பகுதியில் மோதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஹெட்டிப்பொல மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் கூட்டம் நடத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நேற்று நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர். இந்த குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதி குற்றம் இழைக்கப்பட்டுள்ளமைக்கான சுருக்க அறிக்கையை இன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு அமைய, விசாரணை அதிகாரிகளால் இன்றைய தினம் குறித்த சுருக்க அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க தொடர்பில் கொழும்பு தெற்கு பிராந்திய ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.