by Staff Writer 07-05-2019 | 3:53 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்தார்.
இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற விரிவுரையாளராவார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் நேற்று (06) பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை காரணமாக இ.விக்னேஸ்வரன் உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.