by Bella Dalima 07-05-2019 | 4:57 PM
பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை FIFA அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டினை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளைத் தெரிவு செய்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அவ்வகையில், பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை FIFA அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் இருந்து சிறந்த பெண் கோல்கீப்பர் (Goalkeeper), சிறந்த பெண்கள் அணி ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி மிலன் நகரில் நடைபெறவுள்ள FIFA விருது வழங்கல் விழாவில், பெண்கள் பிரிவில் தெரிவு செய்யப்படும் வீராங்கனைகள் இந்த விருதுகளைப் பெறவுள்ளனர்.
சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஆண் பயிற்சியாளர், சிறந்த பெண் பயிற்சியாளர், சிறந்த ஆண் கோல்கீப்பர், சிறந்த பெண் கோல்கீப்பர், சிறந்த ஆண்கள் அணி, சிறந்த பெண்கள் அணி, சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது, ஃபெயார் பிளே விருது, ரசிகர்களின் விருது என மொத்தம் 11 பிரிவுகளில் FIFA விருதுகள் வழங்கப்படுகின்றன.