வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் முப்படையினர் சோதனை

வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் முப்படையினர் சோதனை

by Bella Dalima 27-04-2019 | 6:16 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர பகுதியில் இன்று காலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேருந்தில் பயணித்த பிரயாணிகள் இறக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, மூன்றாம் குறுக்குத்தெரு, சந்தை மேற்கு ஒழுங்கை மற்றும் ஓடக்கரை பகுதிகள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாக சோதிக்கப்பட்டுள்ளது. ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தாக ஐவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். வவுனியா நகரப்பகுதியில் இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை, வாகனங்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியிலும் வர்த்தக நிலையங்கள், காணிகள், வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஏ 9 வீதியால் பயணித்த வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.