மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி

by Staff Writer 20-04-2019 | 4:44 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது. எனினும், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை உணவுகளின் தரம் மற்றும் விவசாய வர்த்தக செயற்பாடுகள் பிரிவின் தலைமை அதிகாரி துமிந்த பிரியதர்சன குறிப்பிட்டார். அதற்கமைய, அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையில் மாத்திரமே மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை காணப்படுவதாக அவர் கூறினார். எனினும், சந்தைகள் மற்றும் ஒரு சில விற்பனை நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக துமிந்த பிரியதர்சன தெரிவித்தார். பண்டிகைக் காலத்தின் பின்னர் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மரக்கறிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.