பாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகம்: பார்வையிடச் சென்றிருந்த மாணவர்கள் வௌியேற்றப்பட்டனர்

by Staff Writer 05-04-2019 | 7:32 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையே, பாராளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்ட பொருத்தமற்ற பகுதிகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, பாராளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்த பாடசாலை மாணவர்களை, அங்கிருந்து வௌியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதத்தின் போது தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். பாடசாலை மாணவர்களை வௌியேற்றுமாறு சபையில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர் பகுதியில் இருந்த பாடசாலை மாணவர்களை உடனடியாக வௌியேற்றுவதற்கு பாராளுமன்ற அலுவலக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.