ஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது

பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய ஹெரோயினுடனான ஈரானிய கப்பல்

by Staff Writer 24-03-2019 | 10:42 AM
Colombo (News 1st) ஹெரொய்ன் ஏற்றப்பட்ட ஈரானின் ட்ரோலர் படகொன்றை தெற்கு கடற்பரப்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றினர். இந்த படகிலிருந்து 107 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரொய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையின்போது காலி அக்குரலயிருந்து 10 தசம் ஐந்து கடல் மைல் தொலைவில் இந்த ட்ரோலர் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் சுரனிமல கப்பல் இந்த சுற்றிவளைப்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு தரப்பினர் ஈரான் படகிலிருந்து 107 கிலோ 22 கிராம் ஹெரொய்னை கைப்பற்றியதுடன் ஒன்பது ஈரான் பிரஜைகளையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட படகுடன் சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.