ஆவணங்களை வழங்கவில்லை என்பதை நிராகரித்தது செயலகம்

அர்ஜூன மகேந்திரனின் நாடு கடத்தலுக்கான ஆவணங்களை வழங்கவில்லை எனும் கருத்தை நிராகரித்தது ஜனாதிபதி செயலகம்

by Staff Writer 21-03-2019 | 9:18 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, சிங்கப்பூரில் இருப்பதாகக் கருதப்படும் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கு தேவைப்படும் ஆவணங்களை இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாகக் கூறப்படும் கருத்தை இலங்கை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அதனை செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூரின் சட்ட மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளதாக, சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சு இலங்கைக்கு அறிவித்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி சர்வதேச பொலிஸார் விடுத்த சிவப்பு அறிவித்தலும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதனை சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிவித்தலாக ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.