by Staff Writer 15-03-2019 | 8:53 PM
Colombo (News 1st) சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி மன்னார் - சிலாவத்துறை மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள சுமார் 36 ஏக்கர் காணிளை விடுவிக்கக் கோரி 109 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 24 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சிலாவத்துறை பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இம்மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சிலாவத்துறையிலுள்ள மூன்று பள்ளிகளிருந்து ஜூம்மா தொழுகையின் பின்னர் பேரணியாக வருகை தந்த மக்கள் சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, காணிகளை இழந்தவர்களில் 12 குடும்பங்களுக்கு தலா 20 பேர்ச்சஸ் வீதம் அரச காணி சிலாவத்துறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நான்கு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் அரச காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாவத்துறை கடற்படை முகாமினை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.