by Bella Dalima 15-02-2019 | 5:36 PM
தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய மின்கலங்களின் ( Battery) பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள பொலித்தீனை மிகக்குறைந்த செலவில் மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழிமுறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவிலிருந்து மின்கலங்களுக்கான கார்பனை உருவாக்கும் முறை இதுவரை மிகவும் செலவு மிக்கதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், அத்தகைய கார்பனை உருவாக்க மிகவும் எளிமையான, செலவு குறைவான வழிமுறையை உருவாக்க விஞ்ஞானிகள் விரும்பினர்.
அதற்காக, பொலித்தீன் பைகளை சல்ஃப்யூரிக் அமிலத்தில் மூழ்கவைத்து, அதனை அழுத்தம் நிறைந்த உலையில் சூடுபடுத்தி, பொலித்தீனின் உருகு நிலைக்கு சற்று குறைவாக அந்த உலையில் வெப்பமூட்டப்படுகிறது.
இந்த முறையால், சல்ஃபோனிக் அமிலப்பொருட்கள் பொலித்தீனில் உள்ள கார்பன் மூலப்பொருட்களுடன் இணைந்து கொள்ளும். அதையடுத்து, சல்ஃபோனேற்றம் செய்யப்பட்ட அந்த பொலித்தீனில் இருந்து சுத்தமான கார்பன் தயாரிக்கப்படுகிறது.
அந்த கார்பனை மின்கலங்களின் பாகங்களாகப் பயன்படுத்தி பரிசோதித்தபோது, சந்தையில் விற்கப்படும் பேட்டரிகளைப் போலவே அதன் செயற்திறன் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.