by Fazlullah Mubarak 27-01-2019 | 7:33 PM
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வௌிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீடமைப்பு கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2 வருடங்கள் நிவாரண காலத்துக்கு உட்பட்ட வகையிலும் 15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் இந்தக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, நிநி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் திட்டம் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பலருக்கு உள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்துள்ள, கணிசமான தொகையை இலங்கை வங்கிகளில் வைப்பீடு செய்துள்ளவர்கள் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்தக் கடன் திட்டத்தின் வட்டியில் 75 வீதம் அரசினால் செலுத்தப்படும்.
முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்காக மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வாடகை மோட்டார் வாகன சேவைகளை ஆரம்பிக்க 20 இலட்சம் ரூபா நிவாரண கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 35 வயதைத் தாண்டிய, முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.