மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்றும்

மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்றும்

by Staff Writer 05-12-2018 | 6:58 AM
Colombo (News 1st) ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக இன்று (05) இடம்பெறவுள்ளது. மனுதாரர் தரப்பில் நேற்று மன்றில் ஆஜராகிய கனகீஸ்வரம், திலக் மாரப்பன, ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் விரான் கொரயா ஆகியோர் நேற்று மன்றில் நீண்ட விளக்கத்தை அளித்தனர். கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியல் அமைப்புக்கு முரணானது என ஜனாதிபதி சட்டத்தரணி கனகீஷ்வரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். நாட்டின் பாரிய பேரிடர், வன்முறை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் 70 (01) சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். இல்லாவிடின், பாராளுமன்றத்தின் 3/2 பெரும்பான்மை விருப்பத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டனர். ஜனாதிபதியின் நடவடிக்கையால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள், நிறைவேற்றதிகாரமும் பாராளுமன்றமும் மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறுப்பை மீறி அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுமாயின் அதனைத் தடுக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளதென சுட்டிக்காட்டினர். இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களின் இடை மனுதாரர்களாக இணைப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான 10 சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டத்தரணிகளான அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்திரா வன்னியாரச்சி, டபிள்யூ.டி.ஜே. செனெவிரத்ன, ஶ்ரீயானி விஜேவிக்ரம, சிசிர ஜயகொடி, சந்திரசிறி கஜதீர, லக்ஸ்மன் வசந்த பெரேரா, டிலான் பெரேரா, அனுருத்த ஜயரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும் அடங்குகின்றனர். பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதை எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி கடந்த 13 ஆம் திகதி, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிகாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.