இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி குறித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு
by Staff Writer 10-09-2018 | 5:47 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக உரிமை அனுசரணைக்காக வௌிநாட்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தனிப்பட்ட ஒருவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைப்படி, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் இதுவரை தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைப்படியே விசாரணைகள் இடம்பெறும் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.