சமஷ்டி தொடர்பான நிலைப்பாட்டை வௌிப்படுத்துவார்களா?

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சமஷ்டி தொடர்பான நிலைப்பாட்டை வௌிப்படுத்துவார்களா: சிவசக்தி ஆனந்தன் கேள்வி

by Staff Writer 04-09-2018 | 7:29 PM
Colombo (News 1st)  மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி தொடர்பான தமது நிலைப்பாடுகளை வௌிப்படுத்துவார்களா என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், சமஷ்டி தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பது தொடர்பில் வௌிப்படுத்தப்பட வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் அறிக்கை மூலம் கோரியுள்ளார். சமஷ்டிக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தி தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி, ஃபெடரல் கட்சி என்றே பொதுவாக அழைக்கப்படுவதாகவும் அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக முறையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, அதியுச்சமாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டதாகவும் சமஷ்டி என்ற பெயர்ப்பலகை அவசியமில்லை என்று அத்தலைவர்களால் கூறப்பட்டிருக்கவில்லை என்றும் சிவசக்தி ஆந்தன் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த ஏதுவாக புதிய அரசியலமைப்பு தேவை என்ற அடிப்படையிலேயே இணக்க அரசியல் நடத்தி, அரசாங்கத்தை எதிர்க்காத எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமந்திரன் கூறியதன் அர்த்தம், சமஷ்டி உள்ளே இல்லை என்பதுதான் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.