Enterprise Sri Lanka 2018 இரண்டாம் நாள் நிகழ்வுகள்
by Bella Dalima 30-08-2018 | 8:48 PM
Colombo (News 1st) நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் Enterprise Sri Lanka 2018 தேசிய கண்காட்சி மொனராகலையில் நேற்று (29) ஆரம்பமானது.
இலங்கையை தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றுவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படும் நிலையான அபிவிருத்தி என்பன கண்காட்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
12 வலயங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில் 515 அரச மற்றும் தனியார் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களிலுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி ஆகியனவும் இங்கு வழங்கப்படவுள்ளன.
இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகளை அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளதுடன், காலை 10 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை மக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும்.