by Bella Dalima 09-08-2018 | 8:43 PM
Colombo (News 1st) தென் ஆபிரிக்காவிற்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
இது தென் ஆபிரிக்காவிற்கு எதிராக 4 வருடங்களின் பின்னர் இலங்கை பெற்ற முதல் வெற்றியாகும்.
சீரற்ற வானிலையால் ஆரம்பம் முதலே தடைப்பட்ட இந்தப் போட்டி 39 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது.
குசல் ஜனித் பெரேரா தனது 11 ஆவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை எட்டினார்.
திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக ஜோடி ஏழாம் விக்கெட்டிற்காக 109 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
தனது முதல் சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை அடைந்த தசுன் ஷானக 34 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
தனது ஒன்பதாவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த திஸர பெரேரா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 2 ஓவர்களில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டது.
சில நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமான இந்தப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு 21 ஓவர்களில் 191 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
ஹாஷிம் அம்லா மற்றும் ஜோன் போல் டுமினி ஜோடி மூன்றாம் விக்கெட்டிற்காக 57 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
ஹாசிம் அம்லா 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தென் ஆபிரிக்க அணியால் 21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களையே பெற முடிந்தது.
சுரங்க லக்மால் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.