by Chandrasekaram Chandravadani 02-07-2018 | 11:05 AM
ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் பலியானவர்கள் நாட்டின் சிக் (Sikh) சிறுபான்மையின அங்கத்தவர்கள் ஆவர்.
குண்டுத் தாக்குதலின் வேகத்தில், அருகிலுள்ள கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனியைச் சந்திப்பதற்காக இவர்கள் நந்தஹார் மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த வேட்பாளர்கள் மட்டுமே இன்றைய குண்டுத் தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நந்தஹார் மாகாணத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அஷ்ரப் கனி, தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர், ஜலலாபாத் நகரில் வைத்தியசாலை ஒன்றைத் திறந்துவைத்துள்ளார். ஆனால், தாக்குதலின்போது, சம்பவ இடத்தில் ஜனாதிபதி இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தாக்குதலில் பலியானவர்களுள், எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அவ்தார் சிங் கால்சா மட்டுமே அடங்குவதாகவும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 17 பேர் சிக் மற்றும் இந்துக்கள் என நந்தஹார் மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளர் நஜிபுல்லா கமாவேல் தெரிவித்துள்ளார்.