by Bella Dalima 09-06-2018 | 6:00 PM
காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகரை நிஜ வாழ்வில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர்.
காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்திப் பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேரெதிர் குணம் கொண்டவர்.
சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காக செலவழித்துவிட்டார் நானா படேகர்.
மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015 ஆம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் பிளவுற்றன. ஆடு, மாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ''நாம்'' என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.
முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 இலட்சம் ரூபா கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபா திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.
மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் 'நாம்' அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது.
கணவரை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துக்கொடுப்பது, இளம் பெண்களுக்கு சுயதொழில் கற்றுக்கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.