by Staff Writer 04-06-2018 | 3:14 PM
பிரதி சபாநாயகர் பதவிக்கு பலர் முன்மொழியப்படும் பட்சத்தில், அதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்திரிகை செய்திகளின்படி பிரதி சபாநாயகர் பதவிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவில் இருந்து சுதஷ்ஷனி பெர்ணேன்டோ புள்ளேயின் முன்மொழியப்பட்டுள்ளது.
அதனைத் தவிர காதர் மஸ்தான், மலிக் ஜயதிலக மற்றும்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்படுனகின்றன.
எனினும் அந்த பதவிக்கு இதுவரை எந்த கட்சியும் பெயர்களை முன்வைக்கவில்லை என பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நாளை தெரிவு செய்யப்படவுள்ளார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்திலிருந்தும், பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் திலங்க சுமத்திபால விலகியுள்ளமையால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமத்திபாலவின் இராஜினாமா நாளை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.