காலா இசை வௌியீடு:ரசிகர்கள் 10,000 பேருக்கு அழைப்பு

காலா இசை வௌியீட்டு விழாவிற்கு ரஜினி ரசிகர்கள் 10,000 பேருக்கு அழைப்பு

by Staff Writer 07-05-2018 | 4:12 PM
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் இசை வௌியீட்டு விழா 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதுவரை ரஜினி படத்தின் இசை வெளியீடு ஏதாவது அரங்குக்குள்தான் நடைபெறும். முதல் முறையாக காலா படத்தின் இசை வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிடவுள்ளனர். காலா படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடத்தும் விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10,000 பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த 10,000 பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. காலா பட இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10,000 பேர் அழைக்கப்பட்டு இருப்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, முதலில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் அனைவரையும் நியமனம் செய்த பிறகு அவர்களை ஒரே இடத்தில் திரள செய்து, கட்சி பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தார். காலா பட இசை வெளியீட்டு விழாவை அவர் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் முக்கிய நிர்வாகிகளை 9 ஆம் திகதி சென்னை வர ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே 9 ஆம் திகதி காலா பட இசை வெளியீட்டு விழாவின்போது, ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.