அம்பாறை மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் சந்தை

by Bella Dalima 02-05-2018 | 3:25 PM
Colombo (News 1st)  எதிர்வரும் 05 ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் சந்தை இடம்பெறவுள்ளது. தொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இத்தொழில் சந்தை உள்நாட்டில் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ள தொழில் வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் என்பன தங்களது பதவி வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளது. தொழிலை எதிர்பார்த்திருப்போரை அந்த வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்ளல், தொழில் வழிகாட்டல் சேவை மற்றும் தொழில் திறவுகோல் சேவைகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிக் கற்கைநெறிகள் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் பயிற்சி நெறியில் ஈடுபடுத்துதல் போன்ற சேவைகள் இதன்போது வழங்கப்படவுள்ளன. நேர்முகப் பரீட்சையின் பொருட்டு, கல்வித் தகைமைச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, சுயவிபரக் கோவையுடன் இத்தொழில் சந்தையில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.