by Staff Writer 30-04-2018 | 4:56 PM
COLOMBO (News 1st) அமைச்சரவையில் நாளை மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்
நாளை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் தற்போது தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளமையால் அந்த பதவிகளுக்கு தற்காலிகமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் உறவுகள் சமூக நலன்புரி மற்றும் திறன்விருத்தி ஆகிய அமைச்சுக்கள் தற்காலிகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர் மலிக் சமரவிக்ரம பொறுப்பாகவுள்ளார்.
இதேவேளை ரவி கருணாநாயக்க மற்றும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோருக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா என்பது தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.
அமைச்சர் தயாகமகே தலைமையில் பெப்பிலியானையில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப்பந்தல் ஒன்றை திறந்து வைக்கும் நேற்றைய நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டிருந்ததுடன் அங்கு விஜேதாஸ ராஜபக்ஸவும் பிரமருக்கு அருகில் அமர்ந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=iDHNYk_99ts