போத்தல் குடிநீரின் தரம் குறித்து அறிக்கையிடுக...

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை, தரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Bella Dalima 05-04-2018 | 8:21 PM
Colombo (News 1st)  போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை மற்றும் தரம் தொடர்பில் விரைவில் தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, சில வியாபாரிகள் தரமற்ற மற்றும் அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.