by Staff Writer 04-04-2018 | 8:16 AM
COLOMBO (News 1st) - தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடினர்.
இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரை எட்டவில்லை.
இதேவேளை, கட்சியின் ஆறு உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
நியூஸ்பெஸ்ட் சடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள், தீர்மானித்துள்ளனர்.
இன்றைய வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தாருஸ்ஸலாமில் நேற்றிரவு இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளனர்.