யாழ் மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்

க.பொ.த சாதாரண தரம்: யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்

by Bella Dalima 29-03-2018 | 8:16 PM
Colombo (News 1st)  இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், 6 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுனி ஹங்சனா தத்சரனி செனவிரத்ன, அதே பாடசாலையைச் சேர்ந்த சமோதி ரவீசா சுபசிங்க மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நவோதயா பிரபாவி ரணசிங்க ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். மேலும், கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் லிமாஷா அமந்தி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ரந்தி லக்பிரியா மற்றும் இரத்தினபுரி சீவிலி மத்திய மகா வித்தியாலயத்தின் கவீஷ பிரதீபாத் ஆகியோரும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் 9 மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை, யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமார் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளார். இம்முறை பரீட்சையில் 6,88,573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அனைத்துப் பாடங்களிலும் 9960 மாணவர்கள் A சித்தி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தத் தொகை அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை, 996 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் இம்முறை கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் 9A சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.