வடமாகாண சபையை நம்பிய மக்கள் ஏமாந்துவிட்டனர்: மாவை

வட மாகாண சபையை நம்பிய மக்கள் ஏமாந்துவிட்டதாக மாவை தெரிவிப்பு

by Bella Dalima 21-03-2018 | 7:04 PM
வட மாகாண சபையை நம்பிய மக்கள் ஏமாந்துவிட்டதாக மாவை தெரிவிப்பு வட மாகாண சபையை நம்பிய மக்கள் ஏமாந்துவிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது,
எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும் அழிந்துபோன எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்புவதற்கும், மிக அதிகமான உரித்தைக் கொண்டிருந்த சபையில் இருந்து, எங்கள் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்திருக்கின்றார்கள். எங்களுடைய வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். ஏனைய விடயங்களை நாம் ஆராயத் தொடங்கியுள்ளோம். ஆட்களை எச்சரிப்பதற்கோ, பழிவாங்குவதற்கோ, நீக்குவதற்கோ அல்ல. எதிர்காலத்தில் எமது சமுதாயத்தில், எங்களுடைய அமைப்புக்களை கட்சி நேரங்களுக்கு அப்பால், இனத்தினுடைய விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய தந்திரோபாயங்களையும் விசுவாசமாக ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பங்களையும் நாங்கள் உருவாக்க வேண்டும்.