கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா ஆரம்பம்
by Bella Dalima 23-02-2018 | 8:10 PM
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தை அடுத்து, தவக்கால சிலுவைப் பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
நாளை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழா திருப்பலியில் காலி மறைமாவட்ட ஆயர், பேரருட்திரு ரேமன்ட் விக்ரமசிங்கவும், இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாக கச்சத்தீவு திருத்தல பரிபாலகர், நெடுந்தீவு பங்குத்தந்தை - அருட்தந்தை எமில் போல் குறிப்பிட்டார்.
இம்முறை திருவிழாவிற்கு இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால், கடந்த ஆண்டு தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்திருந்தனர்.
எவ்வாறாயினும், இம்முறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கச்சத்தீவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை, இம்முறை கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
60 படகுகளின் ஊடாக இவர்கள் திருவிழாவிற்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.